technology

img

அறிவியல் கதிர்

தடையை தாண்டும்  ரோபோக்கள் 
தங்களுடைய வடிவத்தை உலோக நிலைக்கும் திரவ நிலைக்கும் மாற்றிக் கொள்ளும் ரோபோக்களை விஞ்ஞானிகள் உண்டாக்கியுள்ளார்கள்.குறிப்பிட்ட மருத்துவ,பொறியியல் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக இந்த கருவியின்  அமைப்பை நடைமுறைபடுத்த முயற்சி செய்கிறோம் என்கிறார் சீன ஹாங்காங் பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியியலாளர் செங் ஃபெங் பான். இந்த ஆய்வாளர்கள் ரோபோக்
களை வேறு சில பணிகளை செய்ய வைத்ததுடன்  வழியிலுள்ள தடைகளை கடந்து செல்ல வைத்தனர்.

♦ கேடு விளைவிக்கும் மேகம் 
‘தாய் முத்து’ (mother-of-peral) எனப்படும் அரிதான மேக அமைப்பு ஒன்றின் படத்தை புகைப்படக் கலைஞர் பிரெட்ரிக் ப்ராம்ஸ் வெளியிட்டுள்ளார். இது நார்வே நாட்டில் தோன்றியது. வண்ணமயமான இந்த மேகத்தின் பெயர் முத்து சிப்பியின் ஓட்டிலிருந்து  பெறப்பட்டுள்ளது. வான் வெளியில் உள்ள ஸ்ட்ரேட் டோ  பகுதியில் பனிப் படிகங்களால் இது உருவாகிறது.மைனஸ் 77 டிகிரிக்கும் கீழ் உள்ள கடுமையான குளிர் நிலையில் இவை உருவாகின்றனவாம். பூமியின் ஓசோன் படலத்திற்கு இது கேடு விளைவிக்கலாம்.

♦ புற்று நோய் கண்டுபிடிப்பில் எறும்புகள் 
வெவ்வேறு விதமான புற்று நோய்கள் காரணமாக சிறுநீரின் நாற்றம் மாறுகின்றது.இந்த மாறுபாடுகளை எறும்புகளால் கண்டுகொள்ள முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ‘ஆரோக்கியமான நபர்களை புற்றுநோய்க்கு ஆளானவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட எறும்புகளை பயன்படுத்த முடியும்’ என்கிறார் ஒரு ஆய்வாளர். எறும்புகளை சுலபமாக பயிற்றுவிக்கலாம்;அவை திறன் மிக்கவை; செலவில்லாதது. எனவே அவைகள் புற்று நோயைக் கண்டுபிடிக்க செலவு அதிகம் பிடிக்காத ஒரு முறை. 

 இரத்த உறைதல் குறைபாட்டிற்கு  ஆட்டுப்பாலிலிருந்து மருந்து!
ஆட்டுப்பாலிலிருந்து மருத்துவ குணமுடைய புரதங்களை தயாரிக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO, உலகில் 1000வகைகளை சேர்ந்த 83கோடி ஆடுகள் இருப்பதாகக் கூறுகிறது.  இந்தியாவில் 20முதன்மையான வகைகளை சேர்ந்த 15 கோடி ஆடுகள் உள்ளனவாம். இரண்டே ஆண்டுகளில் சினையாவதும் ஏராளமான பால் தரும் தன்மையினாலும் உயிர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இவற்றின் மீது கவனம் செலுத்துவதில் ஆச்சரியம் இல்லை. இரத்த உறைதலை தடுக்கும் ஆன்டிதிராம்பின் (ANTITHROMBIN) எனும் வேதிப்பொருள் ஆட்டுப்பாலிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் மரபு வழியாக வரும் இந்த மூலக்கூறு குறைபாடு நுரையீரல் வீக்கம் போன்ற தீவிரமான கோளாறு களுக்கு இட்டு செல்லும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடையாக பெறப்பட்ட இரத்தத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட ஆன்டிதிராம்பின் வாரத்திற்கு இரு முறை செலுத்த வேண்டியதிருக்கும். கலப்பின ஆடுகள் மனித ஆன்டிதிராம்பின் மரபணுக்களின் நகலை தங்களது பால் சுரப்பிகளில் கொண்டுள்ளன. இவற்றிலிருந்து நீர்த்த புரதத்தை தனது பாலில் சேர்க்கிறது. 90000 மனித இரத்த யூனிட்டிகளில் உள்ள ஆன்டிதிராம்பின் அளவை ஒரே ஆடே தர முடியும் என்று கூறப்படுகிறது. அண்மையில் அமெரிக்க மருந்துக் கழகம் அங்கீகரித்த, நுரையீரல் புற்று நோய் மருந்தான சென்டுசிமேப்(centuximeb) செயற்கை கருத்தரிப்பு முறையில் உருவாக்கப்பட்ட ஆடுகளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இம்முறையின் மூலம் அதிக அளவில் மருந்துகள் தயாரிக்க முடியுமாம். இவை மருந்து கட்டுப்பாட்டு சோதனைகளை தாண்டுமா என்று தெரியவில்லை.

♦ பசுமை ஹைட்ரஜன்  திட்டம்

ஒன்றிய அரசு அண்மையில் ரூ20000/ கோடி தேசிய பசுமை ஹைடிரஜன் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ஹைடிரஜன் வாயு நிறமற்ற, மணமற்ற ஒரு வேதிப்பொருள். ஆனாலும் அது தயாரிக்கப்படும் முறையிலிருந்து பசுமை,நீல மற்றும் பழுப்பு என மூன்று வகையாக அழைக்கப்படுகிறது. இயற்கை எரி வாயு போன்ற படிவ எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்டால் அது பழுப்பு ஹைடிரஜன் எனப்படுகிறது. இந்த முறையில் கார்பன் டை ஆக்சைடும் வெளிப்படுகிறது. பல்வேறு முறைகளில் அது  வெளியில் உமிழப்படாமல்  கைப்பற்றப்பட்டு ஹைடிரஜன் தயா ரிக்கப்பட்டால்  அந்த வகை ஹைடிரஜன் ‘நீல ஹைடிரஜன்’ எனப்படுகிறது.நிலக்கரியோ இயற்கை எரி வாயுவோ இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை மின் பகுப்பு செய்து கிடைக்கும் ஹைடிரஜனை பசுமை ஹைடிரஜன் என்கிறார்கள். இப்போது தயாரிக்கப்படும்  ஹைடிரஜன் பெரும்பாலும் பழுப்பு ஹைடிரஜனே. ஒரு சதவீதமே நீல ஹைடிரஜன். பசுமை ஹைடிரஜன் திட்டம் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கு என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேரடியாக இயற்கை எரிவாயுவை எரிப்பதனால் ஏற்படும் கார்பன் உமிழ்விற்கு,அதே வாயுவை பயன்படுத்தி  ஹைடிரஜன் தயாரிப்பதனால் ஏற்படும்  கார்பன் உமிழ்வு குறையாது என்கிறார் பீபிள்ஸ் டெமாக்கரசி கட்டுரையாளர் பிரபிர் புர்காயஸ்தா. எனவே மின்சாரத்தை பயன்படுத்தி பசுமை ஹைடிரஜன் தயாரிப்பதுதான் சரியான வழி.  பசுமை ஹைடிரஜனை மின்சாரக் கார் பேட்டரிகளிலும்  அம்மோனியா உரம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். ஆனால் பசுமை ஹைடிரஜன்  தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், மின்சாரக் கார்களில் பயன்படும் எரிகலம்,அம்மோனியா தயாரிக்கும் முறைகளில் தேவைப்படும் மாற்றங்கள், திறன்மிகு மின்பகுப்பு கலங்கள், மின்சாரத்தை சேமிக்க தேவைப்படும் புதிய மின்கல தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிற்கு  திட்ட நிதியான  ரூ 20000/ கோடியில் ரூ 400/ கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது.மீதி தொகை தொழில் தொடங்குவதற்கான மானியம் போன்றவற்றிற்காக கொடுக்கப்படுகிறது என்கிறார் பிரபிர் புர்காயஸ்தா. இந்திய தொழில் முனைவோர் அடிப்படையான தொழில்நுட்பங்களில் ஆர்வம் செலுத்தாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கருவிகளைக் கொண்டே தொழில் நிறுவனங்களை தொடங்குகிறார்கள் என்கிறார் கட்டுரையாளர்.